Friday, December 28, 2012

டிசம்பர் 30, 2012

திருக்குடும்பம் விழா

லூக்கா 2:41-52
   ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்கு போவார்கள்; இயேசுவுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்த பின்பு உறவினரி டையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்கு திரும்பிச் சென்றார்கள்.
   மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரி யாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
   பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவ ராய் வாழ்ந்து வந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், திருக்குடும்பத்தின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்ச் சியைக் காண்கிறோம். எருசலேம் கோவிலுக்கு சென்று திரும்பிய வேளையில் இறைமகன் இயேசுவை, மரியாவும் யோசேப்பும் இழந்து விடுகிறார்கள். இறைமகனைத் தேடி ஆண்டவ ரின் இல்லத்துக்கு மீண்டும் ஒரு பயணம் இங்கே நிகழ்கிறது. உண்மை இறைவனைப் பற்றிய உண்மைகளை அவர் தேர்ந்தெடுத்த திருச்சபைக்குள் மட்டுமே தேடிக் கண்டடைய முடியும் என்பது இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. மரியாவையும், யோசேப்பையும் போன்று கடவுளை ஆர்வமாய்த் தேடும் உணர்வைப் பெற நாம் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரை ஏக்கத் தோடு தேடும் மனநிலை நம்மில் உருவாகும் பொழுது, இறைவனின் திருக்குடும்பத்தில் முழுமையாக பங்கேற்கும் வரம் பெற்றவர்களாக நாம் வாழ முடியும்.