Friday, September 27, 2013

செப்டம்பர் 29, 2013

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு
லூக்கா 16:19-31

   அக்காலத்தில் இயேசு பரிசேயரிடம் கூறியது: "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
   செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதா ளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனி யைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப் படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், 'மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இய லாது' என்றார்.
   அவர், 'அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். அதற்கு ஆபிரகாம், 'மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். அவர், 'அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம், 'அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக் கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்' என்றார்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, பிறர்நலம் பேணும் சகோதர சகோதரிகளாக செயல்பட்டு நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். உவமையில் வரும் செல் வரைப் போன்று, அருகில் துன்புறுவோரை கண்டும் காணாமல் வாழும் மனநிலையைக் கைவிட நாம் அழைக்கப்படுகிறோம். லாசர் ஏழையாய் இருந்தும், செல்வரின் மேசையில் இருந்து விழும் உணவுத் துண்டுகளால் பசியாற்றினாலும் அவற்றை சில நாய்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார். ஆகவே, அவர் இறந்ததும் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறார். உடல் முழுவதும் புண்களுடன் ஒரு ஏழை தன் வீட்டு வாயில் அருகே இருப்பதைக் கண்டும், அவருக்கு உதவ செல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைக் காண்கிறோம். ஆத லால், அவர் பாதாளத்தில் வேதனையை அனுபவிக்கிறார். நம்மிடம் மிகுதியாக இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நாம் கடவுளுக்கு உகந்தவர்களாக வானக வீட்டில் நுழைய முடியும்.

Friday, September 20, 2013

செப்டம்பர் 22, 2013

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு
லூக்கா 16:1-13

   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "செல் வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப் பிட்டு, 'உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறி னார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், 'நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப் போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
   பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முத லாவது வந்தவரிடம், 'நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், 'இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.
    ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரிய வற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங் கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப் பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவ ரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப் பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.''


சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். உவமையில் வரும் வீட்டுப் பொறுப்பாளர் மீது தலைவரின் உடைமைகளை வீணாக்கியதாக குற்றச்சாட்டு வருகிறது. அவர் வீட்டுப் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்படுகிறது. சூழ்நிலையை உணர்ந்துகொண்ட அவர், மற்றவர்களின் மன தில் இடம் பெறுவதற்காக நன்மை செய்வதைக் காண்கிறோம். தன் முன்மதியால் தலைவ ரின் பாராட்டையும் அவர் பெற்றதாக இயேசு கூறுகிறார். நாமும் நமது பாவ நிலையை உணரும்போது, நமது நற்செயல்களால் கடவுளை நெருங்கிச் செல்ல முயற்சிக்க வேண்டும். நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு, நாம் நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டுமென ஆண்டவர் கூறுகிறார். அதேநேரத்தில் நிலையான உறைவிடமான விண்ணகத்தை அடையும் வழியைக் கண்டுணர நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் திருவுளத்தை நேரிய விதத்தில் நிறைவேற்றும்போது, நாம் அவரது நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ முடியும்.

Friday, September 13, 2013

செப்டம்பர் 15, 2013

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு
லூக்கா 15:1-32

   அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வர வேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணு முணுத்தனர்.
    அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன் னார்: "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட் டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண் பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணா மற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சி யைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
    பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூத ரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.''
    மேலும் இயேசு கூறியது: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
   அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத் துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தை யிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
   அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண் டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல் லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித் திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்ப ரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந் தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் பற்றி எடுத் துரைக்கிறார். வழி தவறிய ஆடுகளாக நாம் அலைந்து திரியும்போது, நம்மைத் தேடும் நல்ல ஆயராக ஆண்டவர் இருக்கின்றார். தொலைந்துபோன நாணயமாக நாம் இருக்கும்போது, நம்மை ஆர்வத்துடன் தேடிக் கண்டுபிடிக்கும் உரிமையாளராக ஆண்டவர் செயல்படுகின்றார். ஆண்டவரை விட்டு விலகிச் செல்லும் பிள்ளைகளாக நாம் நடக்கும்போது, நாம் திரும்பி வருவதற்காக காத்திருக்கும் அன்புநிறைத் தந்தையாக நடந்து கொள்கிறார். நாம் திருந்திய உள்ளத்தோடு ஆண்டவரை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தால், அவர் நம்மை நோக்கி பல அடிகள் முன்னே வந்து நம்மை கட்டித் தழுவி அரவணைத்து ஏற்றுக்கொள்கிறார். நமது தன் னல விருப்பங்களை விட்டுவிட்டு, ஆண்டவரின் அரவணைப்புக்குள் திரும்பி வரும்போது விண்ணகத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அதன் வழியாக நாம் கடவுளின் அருள் உயிரைப் பெற்ற வர்களாக புதுவாழ்வைத் தொடங்க முடியும்.

Friday, September 6, 2013

செப்டம்பர் 8, 2013

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு
லூக்கா 14:25-33

   அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர் களிடம் கூறியது: "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரை யும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதி னால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையை சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட் டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலை யில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியை தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தம்மைப் பின்பற்றுவதற்குரிய அடிப்படைத் தகுதிகளைப் பற்றி எடுத்துரைக்கிறார். இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால் உலகு சார்ந்த எதன் மீதும் நாம் பற்று வைக்கக்கூடாது என்பதே அவரது முதல் அறிவுரை. உறவுகளையும், உடைமை களையும் மட்டுமல்ல நம் உயிரையும் இழக்கத் தயாராக இருந்தால் மட்டுமே நாம் இயேசு வைப் பின்பற்றும் தகுதியைப் பெற முடியும். இங்கு சீடத்துவ வாழ்வின் பொருளை இயேசு நமக்கு கற்பிக்கிறார். நாம் கிறிஸ்து இயேசுவின் சீடர்களாக இருக்க வேண்டுமென்றால், நமது சிலுவையை சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர வேண்டும். அப்போது இயேசுவின் விருப் பப்படி நாம் இவ்வுலகில் இறையரசைக் கட்டியெழுப்ப முடியும்.

Sunday, September 1, 2013

செப்டம்பர் 1, 2013

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு
லூக்கா 14:1,7-14

   அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றி ருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: "ஒருவர் உங்களைத் திருமண விருந் துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத் தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற் குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களை யும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், 'இவ ருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட் டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களு டன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.''
   பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையா ளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, மற்றவர்கள் முன்னிலையிலும், கடவுள் முன்னிலை யிலும் நாம் பெருமை பெறுவதற்கான வழியைக் கற்றுத் தருகிறார். பிறர் முன்னிலையில் நாம் பெருமை அடைய விரும்பினால், நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்பதே இயேசு நமக்கு கற்பிக்கும் முதல் பாடம். கடைசி இடத்தில் அமர்ந்திருக்கும் நாம் முதல் இடத்துக்கு அழைக்கப்படும் வேளையில் பெருமை அடைவோம். அவ்வாறே இருப்பவர்க ளுக்கு விருந்து படைப்பதை விட, இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழுமாறு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். இவ்வாறு நாம் மனிதர்களின் கைம்மாறைப் புறக்கணிக்கும்போது, ஆண்டவர் நமக்கு கைம்மாறு அளிப்பார். அப்போது நாம் கடவுளின் முன்னிலையில் மாட்சி பெறுபவர்களாக திகழ முடியும்.