Friday, December 20, 2013

டிசம்பர் 22, 2013

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு

மத்தேயு 1:18-24
   இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஆண்ட வரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந் தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் புனித யோசேப்புக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு அறிவிக்கப் படும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. தனக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா கூடி வாழும் முன்பே கருவுற்றிருப்பதை அறிந்து யோசேப்பு கலங்குகிறார். இருந்தாலும் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்குவது எப்படி என்பது குறித்த சிந்தனையில் ஆழ்கிறார். அதே நேரத்தில் தூக்கம் அவரை ஆட்கொள்ள, ஆண்டவரின் தூதர் அவருக்கு கன வில் தோன்றுகிறார். மரியா தூய ஆவியால் கருவுற்றிருப்பதையும், அவர் உலக மீட்பரைப் பெற்றெடுக்க இருப்பதையும் யோசேப்பு அறிந்து கொள்கிறார். கனவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் திட்டத்தை ஏற்று, மரியாவுக்கும் இயேசுவுக்கும் பாதுகாவலராக வாழ முடிவெடுக் கிறார். யோசேப்பைப் போன்று நாமும் இறைத்திட்டத்தை உணர்ந்து வாழ்ந்தால் கடவுள் நம் வீட்டில் பிறப்பதைக் காண முடியும்.