Friday, December 13, 2013

டிசம்பர் 15, 2013

திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு

மத்தேயு 11:2-11
   அக்காலத்தில் யோவான் சிறையிலிருந்தபோது மெசியா வின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, "வரவிருப்ப வர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழி யாக, "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்ற னர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்'' என்றார்.
   அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: "நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசை யும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரச மாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 'இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவே வரவிருந்த மெசியா என்பதை உறுதி செய்ய, திருமுழுக்கு யோவான் தனது சீடர்களை அனுப்புகிறார். ஆண்டவரின் நாளில் நிகழும் என இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்தவை தம் வழியாக நிறைவேறுவதை இயேசு அந்த சீடர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார். "இயேசுவைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்ற வாக்குறுதியும் இங்கு வழங்கப்படுகிறது. அதே வேளையில் திருமுழுக்கு யோவானே ஆண்டவரின் முன்னோடி என்பதை மக்களுக்கு உணர்த்த இயேசு விரும்புகிறார். "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றிய தில்லை" என்று கூறி, இயேசு அவரை பெருமைப்படுத்துகிறார். நாமும் யோவானைப் போல ஆண்டவரின் வழியைத் தயார் செய்தால், விண்ணரசில் பெருமையுடன் நுழைய முடியும்.