Friday, August 9, 2013

ஆகஸ்ட் 11, 2013

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு
லூக்கா 12:32-48

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணு லகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக் கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாள ருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.''
   அப்பொழுது பேதுரு, "ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: "தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண் டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகி களுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடி படுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல் படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதி யாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப் படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, வீட்டுப் பொறுப்பாளரான கடவுளுக்கு நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். தம் தலைவர் திரும்பி வந்து தட்டும் போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் விழிப்புடன் காத்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். விண்ணகத்தில் வாழும் நம் தலைவராகிய இயேசு, மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது அவரை வரவேற்க விழிப்புடன் காத்திருப்பவர்களாய் வாழ நாம் அழைக்கப் படுகிறோம். "தலைவர் வரக் காலந்தாழ்த்துவார்" என உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, உலகு சார்ந்த தீமையான செயல்களில் நாம் ஈடுபட்டால், எதிர்பாராத நேரத்தில் வரும் நம் தலைவ ரால் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டு நம்பிக்கைத் துரோகிகளுக்குரிய இடத்திற்குத் தள்ளப் படுவோம் என்ற எச்சரிக்கை நமக்குத் தரப்படுகிறது. நம் தலைவர் நமக்குத் தந்த பணியை அர்ப்பண உணர்வுடன் செய்தால், அவர் வந்து நம்மைப் பந்தியில் அமரச் செய்து, நமக்கு பணி விடை செய்வதைக் காண முடியும்.