Friday, July 12, 2013

ஜூலை 14, 2013

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு
லூக்கா 10:25-37

   அக்காலத்தில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக் கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, "'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது" என்றார். இயேசு, "சரியாய்ச் சொன் னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார்.
   அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: "ஒருவர் எருசலே மிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடை களை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார். கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத் திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறி ஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, "தேவையில் உதவி செய்பவரே அடுத்திருப்பவர்" என்ற விளக்கத்தைத் தருவதுடன், நாமும் அடுத்திருப்பவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். எரிகோவுக்குப் போகும் வழியில் கள்வர் கையில் அகப்பட்டவரின் கதையைக் கூறும் இயேசு, அதன் நாயகராக யூதர்களால் தாழ்வாக கருதப்பட்ட ஒரு சமாரியரை முன்னிறுத்துகிறார். இறைப்பணி செய்யும் யூத குருவும், லேவியரும் மனிதநேயத்தோடு நடந்து கொள்ளவில்லை என்று இயேசு சாடுகிறார். இறையன்பால் மட்டும் ஒருவர் கடவுளின் கட்டளையை நிறைவு செய்தவர் ஆக முடியாது; இறையன்போடு பிறரன்பும் இணையும் பொழுதுதான் கடவுளின் கட்டளைகள் ஒருவரது வாழ்வில் நிறைவு செய்யப்படுகின்றன என்பதை இயேசு தெளிவு படுத்துகிறார். உவமையில் வரும் நல்ல சமாரியர், அடிபட்டுக் கிடந்தவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டு உதவி செய்ததைக் காண்கிறோம். நாமும் அவ்வாறே தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கூறிய வழியில் அடுத்திருப்பவர்களாய் இருக்கும்போது, நாமும் கடவுளின் கட்டளைகளை நிறைவு செய்கிற நேர்மையாளர்களாய் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.