Friday, May 10, 2013

மே 12, 2013

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா
லூக்கா 24:46-53

   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், 'பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடு களிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங் கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப் படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்'' என்றார்.
   பின்பு இயேசு பெத்தானியாவரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்க ளுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கி விட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி இயேசு விண்ணேற்றம் அடைந்த நிகழ்வை நமக்கு எடுத்துரைக்கிறது. சிலுவை மரணத்திற்கு பின் உயிர்த்தெழுந்த இயேசு, தனது இறைத்தன்மையை சீடர்கள் உணரும் வகையில் நாற்பது நாட்கள் அவர்களுக்கு காட்சி அளிக்கிறார். இறுதியாக இயேசு விண்ணகம் செல்லும் முன் துணையாளராம் தூய ஆவியாரை சீடர்களுக்கு வாக்களிக்கிறார். கிறிஸ்துவின் நற்செய்தியைப் பறைசாற்ற தூய ஆவியாரின் வல்லமை தேவைப்படுகிறது. உன்னத கடவுளிடம் இருந்து வரும் தூய இந்த வல்லமையைப் பெறுவதற்காக சீடர்கள் எருசலேம் நகரத்திலேயே இருக்குமாறு இயேசு பணிக்கிறார். கடவுளின் திட்டம் நம்மில் நிறைவேற வேண்டுமானால், நாம் அவரது வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதை இயேசு இங்கு கற்றுத் தருகிறார். விண்ணேற்றம் அடைந்த கிறிஸ்துவின் நற்செய்தியை பறைசாற்றுவதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் அவரது உண்மையான சாட்சிகளாக வாழ முடியும்.