Friday, February 15, 2013

பிப்ரவரி 17, 2013

தவக்காலம் முதல் ஞாயிறு
லூக்கா 4:1-13
   அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்டு யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல் லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப் பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன்பின் அவர் பசியுற்றார்.
   அப்பொழுது அலகை அவரிடம், "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்'' என்றது. அதனி டம் இயேசு மறுமொழியாக, "'மனிதர் அப்பத்தினால் மட் டும் வாழ்வதில்லை' என மறைநூலில் எழுதியுள்ளதே'' என் றார். பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத் தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், "இவற் றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்'' என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவ ருக்கே பணி செய்வாயாக' என்று மறைநூலில் எழுதியுள்ளது'' என்றார். பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்' என்றும் 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்' என்றும் மறைநூலில் எழுதி யுள்ளது'' என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே'' என்றார். அலகை சோதனைகள் அனைத் தையும் முடித்த பின்பு, ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, அலகையின் சோதனையை எதிர்கொள்கிறார். மனிதராக தோன்றிய இறைமகன் இயேசு, பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போன்று வாழ்ந் தார். பாவ சோதனைகளை நாம் எவ்வாறு வெற்றி கொள்வது என்பதை உணர்த்தவே, அவர் அலகையின் சோதனைக்கு தன்னை உட்படுத்தினார். மானிடராகிய நாம் சொந்த தேவை களை நிறைவு செய்வதிலும், பதவி, பட்டங்களைப் பெறுவதிலும் மேற்கொள்ளும் முயற்சிக ளால் சோதனைக்கு உள்ளாகிறோம். அலகை இயேசுவுக்கும் இத்தகைய சோதனைகளை கொடுக்கிறது. இயேசு பசியாய் இருந்தும், கல்லை அப்பமாய் மாற்ற வல்லமை உள்ளவராய் இருந்தும் தந்தையாம் கடவுளின் மேல் முழு நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். உலகத் தின் அரசுகள் அனைத்தும் கிடைக்கும் என்ற நிலையிலும், தீமையின் வடிவமான அலகைக்கு அடிபணிய மறுக்கிறார். இறுதியாக, நாம் எந்த விதத்திலும் கடவுளை சோதிக்கக்கூடாது என்று கற்பிக்கிறார். நமது தேவைகளில் கடவுளை முழுமையாக சார்ந்து, அவரில் நம்பிக்கை வைக்கும்போது, இயேசுவைப் போன்று நாமும் அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற முடியும்.