Friday, February 8, 2013

பிப்ரவரி 10, 2013

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு
லூக்கா 5:1-11
   ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்த னர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதை சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
   அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, "ஆழத் திற்கு தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார். சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால் களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதி யான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்த பின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி, இயேசுவின் வார்த்தைகளை கேட்பதற்கு திரளான மக்கள் ஆர்வம் காட்டியதைப் பற்றி பேசுகிறது. இயேசுவும் மக்கள் கூட்டத்தின் ஆவலை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு கற்பிக்கிறார். இயேசு தனது போதனைகளை வழங்க தேர்ந்தெடுத்த மேடை சீமோன் பேதுருவின் படகு. ஆண்டவரின் செயல்பாடுகள் பொருள் பொதிந்தவை என்பதை உணர்த்தும் வகையில் இயேசு இங்கு செயல்படுகிறார். தன்னைத் தேடி வரும் மக்களுக்கு பணி செய்யும் சீடர்களைத் தேர்ந்தெடுக்க விழைந்த இயேசு, சீமோனை அழைக்க விரும்புகிறார். மக்களுக்கான போதனை முடிந்ததும் சீடர்களுக்கான புதுமை ஆரம்பமாகிறது. படகை ஆழத்திற்கு கொண்டுபோய் வலைகளைப் போடுமாறு இயேசு கொடுத்த கட்ட ளைக்கு, சீமான் தாழ்ச்சியோடு கீழ்ப்படிந்ததை இங்கு காண்கிறோம். மீன்கள் கிடைக்காத அனுபவம் இருந்தும், இயேசுவுக்கு கீழ்ப்படிந்ததால் சீமான் புதுமையைக் காண்கிறார். அவரை மனிதர்களைப் பிடிப்பவராக இயேசு மாற்றுகிறார். எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையற்ற நிலையிலும், கடவுளை முழு மனதோடு நம்பி மேற்கொள்ளும் செயல்களில் நாம் புதுமைகளை காண முடியும்.