Friday, October 19, 2012

அக்டோபர் 21, 2012

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு
மாற்கு 10:35-45
   அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்பு கிறோம்'' என்றார்கள். அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, "நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்'' என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கி றீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "இயலும்'' என்று சொல்ல, இயேசு அவர் களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திரு முழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும் படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்'' என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
   இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தலைமைப் பண்பைப் பற்றி எடுத்துரைப்பதைக் காண் கிறோம். திருத்தூதர்கள் எப்பொழுதும் இயேசுவின் அரசாட்சியைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தார்கள். அவர் உரோமையரை விரட்டிவிட்டு இஸ்ரயேலின் ஆட்சியைக் கைப் பற்றப் போகிறார் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அதே மனநிலையில்தான் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகுகிறார்கள். அவரது அரசில் தங்களுக்கு முக்கிய பதவி வேண்டுமென்று கேட்கிறார்கள். இதனால், இந்த இருவர் மீதும் மற்ற சீடர்கள் கோபம் கொண்டார்கள் என்று வாசிக்கிறோம். இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்தவராய், பதவியைப் பற்றிய தெளிவை திருத்தூதர்களுக்கு வழங்குகிறார். பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராகவும், முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் பணியாள ராகவும் இருக்க வேண்டுமென அவர் கற்பிக்கிறார். இயேசுவைப் பின்பற்றி, தொண்டு ஆற்று வதற்கும் பலருடைய மீட்புக்காக நமது வாழ்வை அர்ப்பணம் செய்வதற்கும் நாம் தயாராகும் போது, இயேசுவின் ஆட்சியை இந்த உலகில் நிறுவ முடியும்.