Friday, November 8, 2013

நவம்பர் 10, 2013

பொதுக்காலம் 32-ம் ஞாயிறு
லூக்கா 20:27-38

   அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசே யர் இயேசுவை அணுகி, "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்து போனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோத ரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்த னர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்த னர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு சதுசேயரிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர் களே'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, உயிர்த்தெழுதலுக்குப் பிந்திய வாழ்வைப் பற்றி நமக்கு கற்பிக்கிறார். இயேசுவை இக்கட்டுக்கு ஆளாக்கும் நோக்குடன் சதுசேயர்கள் சிலர் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். தாங்கள் மறைநூலில் தேர்ந்தவர்கள் என்பதைக் காட்டு வதற்காக மோசேயின் சட்டத்தின் அடிப்படையில் பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். உயிர்த் தெழுதல் இல்லை என இயேசுவின் வாயில் இருந்தே மக்களுக்கு மெய்ப்பித்துவிடலாம் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் மோசேயின் வாழ்க்கை நிகழ்வைக் கொண்டே அவர்கள் வாதம் தவறு என இயேசு விடை அளிக்கிறார். ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் கடவுளாகிய ஆண்டவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். உயிரும் உயிர்ப்புமான இயேசுவில் முழு நம்பிக்கை வைக்கும்போது, நாம் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.