Friday, May 18, 2012

மே 20, 2012

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா
மாற்கு 16:15-20

   அக்காலத்தில் இயேசு பதினொருவருக்குத் தோன்றி அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற் கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம் பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களை செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்க ளுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர் மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார்.
   இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

சிந்தனை:
   இயேசு விண்ணேற்றம் அடைந்து தந்தை இறைவனின் வலது பக்கத்தில் அமர்ந்தார். அவர் விண்ணகம் செல்லும் முன், நாம் விண்ணகம் செல்வதற்கான வழியை நமக்கு தந்துவிட்டு செல்கிறார். மேலும் உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்றுமாறு, அவரில் நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் அரும் அடையாளங்களைச் செய்யும் வரத்தையும் அளிக்கிறார். நமது நம்பிக்கை ஆண்டவரின் வரத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதா என்பதை சிந்திப்போம். நமது உண்மையான சாட்சிய வாழ்வால், நாம் விண்ணகத்தைப் பெற்றுக்கொள் வதுடன் பிறரும் விண்ணகத்தின் வழியைக் கண்டுகொள்ள உதவ முடியம்.