Friday, April 27, 2012

ஏப்ரல் 29, 2012

பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு
யோவான் 20:11-18

   அக்காலத்தில் இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்."

சிந்தனை:
   இயேசுவே நமது நல்ல ஆயர்; நாம் அவரது ஆடுகள். ஆயனின் குரலுக்கு செவிகொடுக்கும் ஆடுகள் நல்ல மேய்ச்சல் நிலத்தைக் கண்டடையும்; பசும்புல் வெளியில் இளைப்பாறும். நமக்காக தன் உயிரையே கொடுத்த நல்ல ஆயரான இயேசுவின் குரலுக்கு செவிகொடுக்கும் போது, நாம் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வோம். எதற்கும் பயப்படாமல் இயேசுவின் அன்பரசின் கீழ் பிறரையும் கூட்டிச் சேர்க்கும்போது, ஒரே ஆயரும் ஒரே மந்தையும் என்ற ஒப்பற்ற நிலையை நம்மால் உருவாக்க முடியும்.