Friday, April 20, 2012

ஏப்ரல் 22, 2012

பாஸ்கா காலம் 3-ம் ஞாயிறு
லூக்கா 24:35-48

  அக்காலத்தில் சீடர்கள் இருவரும் எம்மாவு வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும் போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந் தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர் களாய், ஓர் ஆவியை காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட் டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்கு கிடையாதே" என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால் களையும் அவர்களுக்கு காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்ப முடியாதவர் களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்.
   அப்போது அவர் அவர்களிடம், "உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து, "மோசேயின் சட்டத்திலும் இறை வாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப் பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே" என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், 'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" என்றார்.

சிந்தனை:
   இயேசுவின் உயிர்ப்பு சீடர்களுக்கு ஒரு புதிய அனுபவம். வரலாற்றில் அதுவரை நிகழ்ந் திராத ஒரு சம்பவம். பேய் கதைகளையே கேட்டு பழக்கப்பட்ட சீடர்கள், இயேசுவையும் ஒரு ஆவியென்று நினைக்கிறார்கள். எம்மாவு சீடர்களின் அனுபவ பகிர்வும்கூட அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கவில்லை. இயேசு சீடர்களுடைய மனக்கண்களைத் திறந்த பிறகே அவர்கள் தெளிவு பெறுகிறார்கள். கிறிஸ்து தரும் அமைதியால் நமது அறியாமை நீங்கும் போது, நாமும் உயிர்த்த இயேசுவின் அனுபவத்தை பெற முடியும்.